“அந்த ராஜாவும் ஒன்னே ஒன்னு.. இந்த ராஜாவும் ஒன்னே ஒன்னு” : காதல் செய் விழாவில் இளையராஜா

கணேசன் இயக்கத்தில், புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் – நேஹா ஜோடியாக நடிக்கும் படம் காதல் செய்.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இளையராஜா பேசும்போது, “எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளையராஜாக்களே…” என்று துவங்கினார்.
மேலும், “ஏன்யா, காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான்.
ஏன்யா, சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்துல வரல? ஒண்ணுதான் வரும்.
அது என்ன தென்ன மரமா, ஆயிரம் வைக்கறதுக்கு… ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரம் பொறக்கறதுக்கு… பொறந்து வளரணும்யா… ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ங்கற குறள் மாதிரிதான்.
செல்வம் படைச்சவனா இருக்கறது வேறு. ஆனா, ரொம்ப தெளிந்த அறிவோடு இருப்பது வேறு. திருவேறுனா இன்னொரு அர்த்தமும் இருக்கு. நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்டா… ஆனா, தெள்ளியராக இருப்பது ரொம்ப கஷ்டம்.
இந்தப் படத்தை எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு படத்தை எடுக்க எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம். படத்தைப் பார்க்கறவங்களுக்குத்தான் கஷ்டம் வரக்கூடாது. ‘காதல் செய்’னு டைட்டில் வச்சிட்டீங்க. காதல் செய்ய பார்க்கறேன். என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஆனா, எதைக் காதலிக்கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளியனா இருக்கேன்.16 வயதினிலே பண்ணும் போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்’ என்று பேச, ஏகப்பட்ட கைதட்டல்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.