இனி 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் : நிதின் கட்கரி அறிவிப்பு

டில்லி

னி தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறிச் செயல்படுகிறது என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல் திருமாவளவன் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

மேலும் சமீபத்தில் நிதின் கட்கரியை சந்தித்த தமிழக அமைச்சர் எ.வ.வேலு சென்னை புறநகரில் வானகரம் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்த கோரிக்கையை ஏற்றுச் சுங்கச் சாவடிகள் அகற்றுவதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். அதன்படி 60 கி.மீ. தொலைவுக்கும் குறைவான தூரத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் என நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வாக்குறுதிப்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 50 சுங்கச் சாவடிகளில் 6 விதிகளை மீறி செயல்படுவது தெரிய வந்துள்ளது .தற்போது விதிகளை மீறிய சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்ற அமைச்சரின்  அறிவிப்பால் தமிழ்நாட்டில் 6 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.