அன்று பொள்ளாச்சி… இன்று விருதுநகர்… முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா?- போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல விருதுநகர் சம்பவமும் உள்ளதால் உரிய விசாரணை நடத்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளனர். பேரில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், துணை சூப்பிரண்டு அர்ச்சனா ஆகிய அதிகாரிகள் குழு இளம்பெண்ணை சந்தித்து விபரம் சேகரித்தனர்.

இதுகுறித்து டி.ஐ.ஜி. பொன்னி கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூக நலத்துறை ஆலோசனையின்பேரில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். பாலியல் தொடர்பான புகார் கிடைத்ததும் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

அதன் அடிப்படையில் தான் பெண்ணின் காதலன் ஹரிகரன், தி.மு.க. இளைஞரணி வார்டு அமைப்பாளர் ஜூனத் அகமது, முத்தால் நகர் மாடசாமி, ரோசல்பட்டி பிரவீண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் 9, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறுவர்கள் இளைஞர் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

ஹரிகரன் உள்பட 4 பேர் சிவகாசியில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் பெண்ணின் ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டதா? அல்லது வேறு யாருக்காவது பகிரப்பட்டதா? என்பது பற்றியும் விசாணை நடைபெற்று வருகிறது. இந்த பாலியல் பலாத்காரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் புலன் விசாரணை பிரிவு அதிகாரியாக போலீஸ் துணை சூப்பிரண்டு அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைதானவர்கள் இதுபோல் வேறு எந்த பெண்ணையும் மிரட்டி பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டு இருக்கலாமா? இவர்களுக்கு துணையாக வேறு யாரும் உள்ளார்களா? என விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கைதானவர்களை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோன்று விருதுநகர் பாலியல் சம்பவத்திலும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதுநகர் பாலியல் வழக்கு விசாரணையின்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைதான 8 பேரும் அளித்த வாக்குமூலத்தில் ‘பாலியல் வீடியோவை காட்டியே இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தோம்’ என்று கூறியிருப்பதன் மூலம் அது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்குமோ என்கிற அச்சமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.