இலங்கை தமிழர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு! 3 பெண் குழந்தைகளின் தந்தை என தகவல்


தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் புதிதாக சரவணா ஏஜென்சி என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்று துவங்கப்படவுள்ளது. குடோன் போன்ற அமைப்பு உள்ள பெரிய கடையில் கட்டுமான பணிக்கு தேவையான எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் விற்பனைக்கு புதிதாக இறக்கி வைக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் கடையில் யுபிஎஸ் பொறுத்தும் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துரை (34) வந்துள்ளார்.

மாலையில், கடை மேலாளர் அழைப்பின் பேரில் சுரேசை பார்ப்பதற்காக நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது இளைஞர் சுரேஷ் மர்மமான முறையில் சடலமாக தரையில் கிடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த நண்பர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டு சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று உறுதி செய்துள்ளனர்.

கடை நிர்வாகத்தினரிடம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறப்பிற்கான காரணம் குறித்து கேட்டபோது அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், கடை மேலாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இறந்த சுரேஷிற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவுவதால் பொலிசார் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையில் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே சுரேஷ் மரணத்திற்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.