இந்தியாவில் ஊரடங்கு: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
கொரோனா
முதல் அலை தீவிரமாக பரவியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொற்றின் பரவல் குறைந்ததால், படிப்படியாக பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதேசமயம், தளர்வுகளுடன் கூடிய பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன.

இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலைகளும் இந்தியாவில் கால் பதித்தது. இந்த அலைகளின் போதும், ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பாதுப்பு குறையத் தொடங்கியதும் தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது. ஆனாலும், அந்தந்த மாநிலங்கள் தங்களது மாநில பாதிப்புக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன.

இதனிடையே, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், இந்தியாவில் 4ஆவது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் முழுமையாக நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறையின் வழைகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 7 வாரங்களாக கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருகிறது. மொத்த பாதிப்பு 23,913ஆக உள்ளது. நேர்மறை விகிதம் 0.28 சதவீதமாக உள்ளது. நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1778 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடிதம்
மத்திய அரசு கடிதம்

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியிட்ட கடிதத்தின்படி, தற்போதைய உள்துறை அமைச்சகத்தின்
கொரோனா கட்டுப்பாடுகள்
தொடர்பான உத்தரவு காலாவதியான பிறகு, உள்துறை அமைச்சகத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், ஒருவேளை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அந்தந்த மாநிலங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.