மரக்கடையில் பயங்கர தீ விபத்து – 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில், மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை மாநிலமான, தெலங்கானா மாநிலத் தலைநகர், ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள பொஹிகுடா என்ற பகுதியில் மரம் சார்ந்த பொருட்கள், பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் குடோனில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் நிறைய இருந்ததாகத் தெரிகிறது. மேலும், இந்த கடையில் வேலை செய்து வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் குடோனிலேயே தங்கி வந்தனர்.

இந்நிலையில், மரக்கடையின் குடோனில் இன்று அதிகாலை 4 மணி அளவில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் 12 பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரே ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடோனில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.