டெல்லியில் சாஸ்திரி பூங்காவில் உள்ள ஒரு கழிவுநீர் வடிகாலில் கழிவுநீர் நிரம்பி வழிந்ததால், பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹாசன் என்பவர் சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்தார். அதைக் கண்ட பொதுமக்களும், அவருடைய ஆதரவாளர்களும் அவரை திரைப்பட பாணியில் பாலில் குளிப்பாட்டினர். இதை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஆம் ஆத்மியின் நியமன கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹாசன், “நீண்ட நாள்களாக கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என்று பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பா.ஜ.க கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அதனால், நானே இறங்கி சுத்தம் செய்தேன்” என்றார்.