ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கில் அவசர விசாரணை நடத்த முடியாது; உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லுமென்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர்.இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த தீர்ப்புக்கு பின் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு வருவதை புறக்கணித்தனர். மேலும், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பின் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி செய்முறை பயிற்சி தேர்வுகளையும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் எழுதவில்லை. இதனால், தேர்வில் பங்கேற்காத மாணவிகளுக்கு ‘ஆப்சென்ட்’ போடப்பட்டுள்ளது. மேலும், இறுதி செய்முறை பயிற்சி தேர்வு எழுதாத மாணவ-மாணைவிகளுக்கு மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என கர்நாடக பள்ளிகல்வித்துறை மந்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளை வரும் 28-ம் தேதி முதல் பள்ளிகளில் இறுதித்தேர்வுகளும் தொடங்க உள்ளன. இந்த இறுதி தேர்வுகளையும் எழுதவில்லை என்றால் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். இந்நிலையில், மாணவ-மாணவிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்வு தொடங்க உள்ளதால் ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ள மாணவிகளின் வழக்கறிஞர்களில் ஒருவரான கமத் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீட்டார். ஆனால், ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. இந்த பிரச்சினைக்கும் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த விவகாரத்தை உணர்வுப்பூர்வமானதாக்க வேண்டாம்’ என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹிஜாப் வழக்கு குறித்த விசாரணை தேதி ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஹிஜாப் வழக்கை எப்போதில் இருந்து விசாரிப்பது என்பதை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.