மேகதாது விவகாரம்: தமிழக தீர்மானத்தை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பெங்களூரு, 
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது. 
இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது.
மேலும், கர்நாடக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த சில நாட்களுக்கு தாக்கல் செய்தார். அதில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கடந்த 21 ஆம் தேதி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.