புதிய, அதிக சக்தி வாய்ந்த, தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை… வடகொரியா அதிரடி

பியாங்யாங்,
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், தங்கள் ஆயுத பலம் பற்றி உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு வடகொரியா அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா இன்று பரிசோதனை செய்துள்ளது.
இதுபற்றி ஜப்பானிய அதிகாரிகள் கூறும்போது, இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளது.  இதேபோன்று, 6 ஆயிரம் கி.மீ. உயரத்திற்கு பறந்து சென்றுள்ளது.  ஒரு மணிநேரம் பறந்து சென்று பின்பு ஜப்பானிய கடல் பகுதிகளில் விழுந்துள்ளது என தெரிவித்து உள்ளனர்.
இந்த வகை ஏவுகணையானது ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு செல்லும் திறன் பெற்றது.  அமெரிக்காவையும் அடைந்து தாக்க கூடிய வல்லமை பெற்றது.
கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக, தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என்று தென்கொரியாவும் கூறி உறுதி செய்துள்ளது.  இந்த சோதனையானது ஐ.நா.வின் விதிகளை மீறிய செயல் என தென்கொரிய அதிபர் மூன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.