ஏப்ரல் 17 முதல் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம் வாரந்தோறும் ஒளிபரப்பாகிறது

பாடலாசிரியர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது நாட்படு தேறல் இரண்டாம் பருவம் தயாராகியிருக்கிறது.

100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறல், 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது. ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி – இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது.

மேல்நாடுகளில் திரைப்படங்களை விட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்கின்றது. தமிழில் வைரமுத்து அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். பாடல்கள் எழுதி ஒவ்வொரு பாட்டுக்கும் ஓர் இசையமைப்பாளர் ஒரு பாடகர் ஓர் இயக்குநர் என்று தேர்தெடுத்துப் பாடல் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறலைக் கவிஞர் வைரமுத்து தயாரித்து வழங்குகிறார்.

நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தில் வித்யாசாகர் – யுவன்சங்கர் ராஜா – ஜி.வி.பிரகாஷ் – ரமேஷ் விநாயகம் – அனில் சீனிவாசன் – ஜெரார்ட் பெலிக்ஸ் – நெளபல் ராஜா – அவ்கத் – வாகு மசான் – இனியவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் -ஹரிஹரன் – சங்கர் மகாதேவன் – பாம்பே ஜெயஸ்ரீ – விஜய் யேசுதாஸ் – ஹரிணி – கல்பனா ராகவேந்தர் – பென்னி தயாள் – ஹரிசரண் – அந்தோணி தாசன் – வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பாடகர்களும், காந்தி கிருஷ்ணா – சரண் – பரதன் – சிம்புதேவன் – சரவண சுப்பையா – காக்கா முட்டை மணிகண்டன் – விருமாண்டி – கணேஷ் விநாயகன் – விக்ரம் சுகுமாரன் – தளபதி பிரபு – ரமேஷ் தமிழ்மணி – ராதிகா உள்ளிட்ட இயக்குநர்களும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

வைரமுத்து கூறுகையில், “எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும்பங்கிருக்கிறது. இன்று உலகமெங்கும் திரைப்படத்தில் தாய்மொழி குறைந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ் கற்றுக்கொடுக்கும் பாடல்களாக ஆல்பங்கள் தயாரிக்கப்பட வேண்டியிருக்கின்றன. ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும்; ஆற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு ஒத்துழைக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. தகுதிமிக்க ஆதரவாளர்களால் தான் இது சாத்தியமாகிறது; அவர்களை நான் மறக்க மாட்டேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.