நிஜமானது வேட்டைக்காரனின் கனவு! காவலர் தேர்வில் வென்று ஆட்டோ ஓட்டும் இளைஞர் அசத்தல்!

புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில், ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளார்.
புதுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்த கந்தன் என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில்,  புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதும், எப்படியாவது தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதால், ஆட்டோ ஓட்டிக்கொண்டே உடலை தகுதி செய்துக்கொண்டு , எழுத்து தேர்வுக்கும் தயரானார் கந்தன். பல்வேறு இன்னல்கள் வந்த சூழலிலும் தனது விடா முயற்சியால் உடல் தகுதி தேர்வில் தேர்வான அவர், அண்மையில் நடந்த எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
image
தனது விடாமுயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 31 வயதாகும் கந்தனுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்திலும் காவலர் கனவுடன் இருக்கும்  விஜய் ஆட்டோ ஓட்டிக்கொண்டே தனது கனவுகளைத் துரத்தும் இளைஞராக நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார். அதேபாணியில் வெற்றி பெற்றிருக்கும் கந்தன் ‘வேட்டைக்காரன்’ படத்தினை நினைவூட்டுகிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.