கேரளா பாலியல் வன்கொடுமை வழக்கு; டாட்டூ ஸ்டுடியோ கலைஞருக்கு ஜாமீன் மறுப்பு

கொச்சி,
கேரளாவின் கொச்சி நகரில் எடப்பள்ளி பகுதியில் டாட்டூ ஸ்டுடியோ நடத்தி வருபவர் சுஜீஷ் பி.எஸ். இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

18 வயது இளம்பெண் ஒருவர் சுஜீசின் ஸ்டுடியோவிற்கு டாட்டூ போட வந்தபோது அவரை சுஜீஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து சுஜீசுக்கு எதிராக முதன்முறையாக அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதனையடுத்து, பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் இ-மெயில் வழியே பாலியல் வன்கொடுமை புகார் அளித்து உள்ளார்.  இதுபோன்று 6 பெண்கள் அளித்த பாலியல் வழக்குகள் அவருக்கு எதிராக பதிவாகின.
இந்த நிலையில் சுஜீசை சேரநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் மீதுள்ள பல பாலியல் வழக்குகளில் 2 வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுஜீஷ் கேரள சிறப்பு செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இதன் மீது இன்று நடந்த விசாரணையில் சுஜீசுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி சிபு தாமஸ் மறுத்து விட்டார்.
அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணையை பாதிக்க கூடும்.  சாட்சிகளை கலைக்க கூடும்.  விசாரணையில் தலையிடுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதும் புறந்தள்ள முடியாது.  இதனை கவனத்தில் கொண்டு இந்த சூழலில் சுஜீசை ஜாமீனில் விடமுடியாது என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.