குடிநீரில் பிளாஸ்டிக் பொருளை வடிகட்ட உதவும் வெண்டைக்காய்… ஆய்வில் ஆச்சரிய தகவல்

டெக்சாஸ்,
நாம் அன்றாடம் வாழ்வதற்கு அடிப்படையாக உணவு, குடிநீர் ஆகியவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.  இவற்றில், விரதம், பட்டினி என்ற பெயரில் ஒரு நாளில் உணவின்றி கூட இருந்து விடலாம்.  ஆனால், குடிநீர் இல்லாவிட்டால் நாக்கு வறண்டு தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்படும்.
அதிலும், இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் மக்களை அல்லல்படுத்தி விடும்.  கிடைக்கும் தண்ணீரை குடித்து செல்லும் நிலையும் பல இடங்களில் காணப்படுகிறது.  குடிநீரின் அத்தியாவசிய தேவை ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், அதன் தூய்மையும் தேக நலனுக்கு அவசியம்.
நகர நிர்வாகம் வழங்க கூடிய தண்ணீரை தூய்மையாக்க, குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் பெருமளவில் ரசாயனங்களை பயன்படுத்துகின்றன.  அவை, சேர்ந்து கொண்டு கட்டிகளாக உருமாற்றம் பெறுகின்றன.
அதில், மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் இந்த நுண் பிளாஸ்டிக் பொருட்கள் ஒட்டி கொள்கின்றன.  இந்த கட்டிகளை நீக்கும்போது, நுண் பிளாஸ்டிக் பொருட்கள் நீரிலேயே தங்கி விடுகின்றன.  தூய்மைக்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்களில் பாலிஅக்ரைலமைடு போன்ற சில வேதி பொருட்களானது, சில சந்தர்ப்பங்களில் நச்சு பொருளாக கூட உருமாறி விடும் தன்மை கொண்டுள்ளன.
இந்நிலையில், குடிநீரை தூய்மைப்படுத்தும் பணி பற்றி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டார்லெட்டன் ஸ்டேட் பல்கலை கழகத்தின் பேராசிரியர் ரஜனி சீனிவாசன் தலைமையிலான குழு ஒன்று ஆய்வில் ஈடுபட்டது.
இதில், நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காயில் உள்ள பாலிசாக்கரைடு என்ற வேதிபொருள், வெந்தயத்துடன் சேர்த்து பயன்படுத்தும்போது, கடல் நீரில் உள்ள நுண் பிளாஸ்டிக்குகளை நீக்குவதில் நன்றாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இதேபோன்று புளியில் இருந்து கிடைக்க கூடிய பாலிசாக்கரைடும் நன்னீரில் உள்ள நுண் பிளாஸ்டிக்குகளை திறம்பட நீக்கியுள்ளது.
பாலிசாக்கரைடு விகிதம், எதில் இருந்து கிடைக்க கூடிய நீர் ஆகியவற்றின் அடிப்படையில் காய்கறி சார்ந்த வேதிபொருட்கள் நன்றாக, சில சமயங்களில் பாலிஅக்ரைலமைடுவை விட சிறப்புடன் செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நச்சு இல்லாத வேதிபொருட்களை, தற்போது பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில், பெரிய அளவில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளாமலேயே பயன்படுத்த முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளது வரவேற்புக்குரியது.
கடல்நீர், நிலத்தடி நீர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கிடைக்க கூடிய நீரில் இருந்து, இந்த தேவையில்லாத நுண் பிளாஸ்டிக்குகளை நீக்கும் பணியை மேம்படுத்த, காய்கறி சார்ந்த வேதிபொருட்களின் விகிதங்கள் உள்ளிட்டவை பற்றி ஆய்வு குழு ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.