வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..மின்சார ஸ்கூட்டி தீப்பிடித்து தந்தை, மகள் பலி.!

மின்சார ஸ்கூட்டி சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்னஅல்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் துரைவர்மா. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின்சார ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் துரைவர்மா தனது மின்சார ஸ்கூட்டியை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து திடீரென பைக் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட புகை வீடு முழுவதும் சூழ்ந்துள்ளது.

இதில் துரைவர்மாவும், அவரின் 13 வயதுடைய மகள் மோகன ப்ரீத்தியும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். வீடு முழுவதும் புகை மூண்டதால் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த இருவருடைய உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார ஸ்கூட்டி தீப்பிடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.