அண்ணாமலை சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: செல்லூர் ராஜூ கருத்து

மதுரை: “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ மாத்தூர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கொடை, ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் உள்ளிட்ட திட்டங்களை முன்னாள் அமைச்சரான செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தொழில் முதலீட்டை பெற முதல்வர்கள் வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்றுதான். முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவர் தமிழகத்திற்கு அதிகப்படியான முதலீட்டை பெற்று தந்துள்ளார்.

கரோனா காலத்திலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாத்தவர் கே.பழனிசாமி. அந்த அடிப்படையில் பட்ஜெட் முடிந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள தமிழக முதல்வரின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள். திமுக அரசின் பட்ஜெட் என்பது அரைத்த மாவையே அரைத்த பட்ஜெட் ஆக உள்ளது. புதிதாக ஒன்றும் இல்லாத பட்ஜெட். பட்ஜெட்டில் யானையை எதிர்பார்த்த மக்களுக்கு பூனை கூட கிடைக்கவில்லை. அதிமுக அரசு கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை, ஏழை – எளிய திட்டங்களை முடக்க நினைப்பது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம்.

பெரியார் கருத்தை மொழி பெயர்த்து உலகமெல்லாம் கொண்டு செல்வதாக கூறிவிட்டு, அவருடைய வழியில் செல்வதாக கூறும் திமுக, பெரியார் வழியில் செல்லும் அதிமுக கொண்டு வந்த பெண்கள் நல திட்டங்களை நசுக்குவது பெரியாரின் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பது போல் உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. திமுக மீது அவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் சொல்லும் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கும்.

வழக்கம் போல வைகை அணையில் தண்ணீர் உள்ளது. அழகர் ஆற்றில் இறங்க திமுக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும். சித்திரைத் திருவிழாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ரவுடிகள் தொல்லை உள்ளதாக டிஜிபியே சொல்லியுள்ளார். சித்திரைத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளனர். ரவுடிகள், பிக்பாக்கெட் திருடர்கள் தொல்லை உள்ளதால் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.