ஐபிஎல் 2022- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. 
அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 104 ரன்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 
லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்த டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.