புதுச்சேரி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவை -ஹைதராபாத், பெங்களூருக்குப் பறக்கலாம்!

புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு இன்று மதியம் முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. அதில் முதல் பயணியாக ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமானச் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி ஸ்பைட்ஜெட் நிறுவனம் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானச் சேவையை தொடங்கியது.

விமானத்திற்கு வரவேற்பு

அதையடுத்து 2019-ம் ஆண்டு பெங்களூருக்கான சேவை நிறுத்தப்பட்டு, ஹைதராபாத்துக்கு மட்டும் விமானச் சேவை தொடர்ந்தது. அதன்பிறகு கொரோனா காலத்தில் 2020 மார்ச் மாத இறுதியில் இந்தியா முழுவதும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு விமான தொடங்கப்பட்டது.

ஹைதராபாத்திலிருந்து இன்று பிற்பகல் 12:05-க்கு புறப்பட்டு மதியம் 1.30-க்கு வந்தடைந்தது. அந்த விமானத்தை வரவேற்கும் விதமாக அதன் மீது தீயணைப்பு வாகனங்கள் மூலம் இருபுறமும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. முதல் விமானத்தில் பயணிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை பயணம் செய்து புதுச்சேரி வந்தடைந்தார்.

கவர்னருக்கு வரவேற்பு கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் சரவணகுமார்

விமான நிலையத்தில் அவரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 72 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட 62 ப்யணிகள் வந்தனர்.

தொடர்ந்து பயணிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். ஹைதராபாத் ஐ.ஐ.டி தயாரித்த குறைந்தவிலை வென்டிலேட்டர் ஐந்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார் ஆளுநர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை, “புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப்பணிகள் தொடர்பாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவிடம் பேசினேன்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழகத்தின் நிலம் தேவைப்படுகிறது. தமிழக அரசு அந்த நிலத்தை கணக்கு பார்க்காமல் தந்தால் விமான நிலைய விரிவாக்கத்தால் தமிழகம் சார்ந்தோருக்கும் பலன் உண்டு. அதற்கு பரந்து விரிந்த மனதோடு தமிழகம் ஒத்துழைக்கவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.