"என் மகள்,மனைவி இவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை; நடிப்பைவிட நினைத்தேன்; ஆனால்"- வருந்திய அமீர் கான்!

நடிகர் அமீர் கான் எப்போதும் தனது படங்கள் சரியாக வரவேண்டும் என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். இதுவரை இரு முறை திருமணமாகி இருவரையும் விவாகரத்து செய்து விட்டுத் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரின் இரண்டாவது மனைவி கிரண் அவரது வீட்டிற்கு அருகில்தான் வசிக்கிறார். இந்நிலையில், அமீர் கான் தனது வாழ்க்கையில் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சமீபத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது தனது சொந்த வாழ்க்கை குறித்து அமீர் கான் மனம் திறந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “எனது கனவை நோக்கியே அதிகமான நேரத்தை செலவழித்துவிட்டேன். அதனை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தேன். ஆனால் சொந்த வாழ்க்கையில், எனக்கு பிரியமானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவிட்டேன்.

அமீர்கான்-கிரண்

எனது பெற்றோர், சகோதர சகோதரிகள், முதல் மனைவி ரீனா, இரண்டாவது மனைவி கிரண் மற்றும் குழந்தைகளிடம் போதுமான நேரத்தை செலவழிக்கவில்லை. எனது மகளுக்கு இப்போது 23 வயதாகிறது. அவள் சின்ன வயதாக இருக்கும்போது நான் அவள் அருகில் இல்லை என்பதை உணர்ந்திருப்பார் என்பதை அறிவேன். அவருக்கு எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், பயம் இருந்திருக்கும். ஆனால் அந்நேரத்தில் நான் அவள் அருகில் இல்லை. இப்போது அதனை உணர்கிறேன். ஆனால் இயக்குனர்களின் நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு மற்றும் பயத்தை உணர்ந்திருந்தேன். இப்போது அவற்றை உணர ஆரம்பித்துள்ளேன். எனது வாழ்க்கையை என்னை மறந்த நிலையில் வாழ்ந்திருக்கிறேன். இதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். ஒருவர் தன்னுடைய குழந்தைகளை சரியான முறையில் வளர்த்தெடுப்பது இந்த தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாகும். ஆனால் நான் அதை செய்யவில்லை. இதனால் எனது நடிப்பைகூட விட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது மனைவி கிரண் என்னை நடிப்பை கைவிடவிடாமல் தடுத்துவிட்டார். இப்போது எனது குழந்தைகள் தங்களிடம் அதிக நேரத்தை நான் செலவிடுவதாக என்னிடம் தெரிவித்தனர்” என கலக்கத்துடன் அமீர் கான் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.