மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சை ரத்து – உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா…!

கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது.

இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. ஏற்கனவே 10 ஆயிரம் கோடி ரூபாயை நிதி உதவியாக இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. மேலும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றுள்ளார். 
இந்த நிலையில், இலங்கையில் உள்ள பிரடன்யா மருத்துவமனையில் போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவசர பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் இலங்கையை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி இந்திய தூதரகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை செய்தியாளரின் டுவிட்டர் பதிவை மேற்கொள்காட்டி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த செய்தியை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. இந்திய தூதர் உடனடியாக தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் இந்தியா எவ்வாறு உதவுவது என்பதை உறுதிபடுத்தவும்’ என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பிரடன்யா மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.