வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மூணாறு : கேரளாவில் கொரோனா பாதிப்பு பிறப்பு மற்றும் இறப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 2020ல் இறப்பு முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருந்த நிலையில் 2021ல் அதிகரித்து சாதனையை ஏற்படுத்தியது. அதேசமயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிறப்பு சதவிகிதம் குறைந்தது.
மாநிலத்தில் 2019ல் 2,70,553 பேர் இறந்த நிலையில் 2020ல் 2,50,971 ஆக குறைந்தது. 2021ல் 3,40,798 ஆக அதிகரித்து சாதனையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021ல் இறப்பு சதவிகிதம் 25.96 ஆக அதிகரித்தது. 2021ல் கொரோனா பரவல் அதிகரித்ததாலும், கொரோனா இணை நோய்களின் பாதிப்பு ஏற்பட்டதாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என கண்டறியப்பட்டது.

மாநிலத்தில் கொரோனா காலகட்டத்தில் இறப்பு சதவிகிதம் அதிகரித்த நிலையில் பிறப்பு சதவிகிதம் வெகுவாக குறைந்தது. 2019ல் 4,80,113 குழந்தைகள் பிறந்த நிலையில் அதன் எண்ணிக்கை 2020ல் 7.43 சதவிகிதம் குறைந்து 4,46,891 ஆக இருந்தது. 2021ல் பிறப்பு எண்ணிக்கை 2019ல் ஒப்பிடுகையில் 58,248 குழந்தைகள் குறைந்து 13.81 சதவிகிதம் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் உடல் ரீதியான பிரச்னைகள், மருத்துவமனைகளில் கொரோனா நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் முறையாக சிகிச்சை கிடைப்பதில் சிக்கல், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் ஏராளமானோர் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டதாக தெரியவந்தது.
Advertisement