இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை: கடும் வன்முறை; கொழும்பு நகரில் ஊரடங்கு 

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிபர் இல்லத்தை முற்றுகையிட மக்கள் கூட்டம் அவ்வப்போது முயன்று வருவதால் அதிபர் இல்லம் முன் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி நேற்று எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள் ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனால் முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.