ஹைதராபாத் | கனவு கண்ட வீட்டில் திருடுபவர் கைது: தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்

ஹைதராபாத்: ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் மஹேஷ் பகவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

குண்டூர் மாவட்டம், பிடுகுராள்ளு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அம்பேத்கர் என்கிற ராஜு என்கிற ராஜேந்திரா (50). எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். சுமார் 21 வீடுகளில் தனி ஆளாக இவர் திருடி உள்ளார். ஒரு திருட்டு வழக்கில் வனஸ்தலிபுரம் போலீஸார் அம்பேத்கரை கைது செய்துள்ளனர். இவரிடம் விசாரணை நடத்தியதில், பகல் நேரங்களில் ஊருக்கு ஒதுக்குபுறமாக பணக்கார வீடுகளை நோட்டமிட்டதாகவும், அதில் பூட்டியுள்ள வீடுகளை குறிப்பு எடுத்துக்கொண்டு, இரவு கனவில் எந்த வீடு வருகிறதோ, அந்த வீட்டில் திருடுவேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்டு, 2 கிலோ தங்க நகைகளையும், 10 கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ. 18 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.