அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம்: டிரம்ப் மகளிடம் 8 மணி நேரம் விசாரணை

வாஷிங்டன், 
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது.

அப்போது தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் பலியாகினர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் தனி குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் மகளும், வெள்ளை மாளிகை முன்னாள் உதவியாளருமான இவாங்கா டிரம்ப், நேற்று முன்தினம் நாடாளுமன்ற குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். காணொலி காட்சி வாயிலாக ஆஜராகிய அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். கலவரம் தொடர்பாக அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் முறையாக பதிலளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த வாரம் இவாங்கா டிரம்பின் கணவர் ஜெரெட் குஷ்னரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.