சாமானியர்களிடம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை :

நாடு முழுவதும் கடந்த 16 நாட்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தினம்தினம் அதிகரிக்கும் விலையால் சாமானிய மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் விலை 80 காசுகள் உயர்த்தப்பட்டதன் மூலம் 16 நாட்களில் ஒரு லிட்டர் விலை ரூ.10-க்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த எரிபொருள் விலை உயர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு மூலம் ஏழை மக்களின் பணம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. 2 வாரங்களில் பெட்ரோல், டீசலின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஜ்டோவும் பா.ஜனதாவை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக தாக்கி உள்ளார். அவர் அக்கட்சியை “லூட் ஜீவி” (கொள்ளையடித்து உயிர்வாழும் உயிரினம்) என்று கூறியுள்ளார்.

மேலும் பா.ஜனதாவை வெளிநாட்டு படங்களில் வரும் ‘கவ்பாய்’ கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கேலி சித்திரம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் கவ்பாய் தனது இரு கைகளிலும் துப்பாக்கிகளுக்கு பதிலாக பெட்ரோல் பம்பு முனைகளை வைத்துக்கொண்டு சாமானிய மக்களை நோக்கி அதை உயர்த்தி பிடிக்கிறார். இதை பார்த்து மக்கள் அஞ்சி நடுங்குவது போல சித்தரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கேலி சித்திரத்தின் கவ்பாய் முகத்தில் பா.ஜனதா தேர்தல் சின்னமான தாமரை உள்ளது. மாநிலத்தில் ஆளும் சிவசேனா தலைமையான மகா விகாஸ் அகாடி அரசில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.