விவசாயிகளிடமிருந்து இனி 365 நாட்களும் பால் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: விவசாயிகளிடமிருந்து எவ்வித தங்கு தடையுமின்றி இனி 365 நாட்களும் பால்கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பால்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழக முதல்வர், மக்களின் தேவையறிந்து துறைதோறும் ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் பால்வளத் துறை அமைச்சரின் உத்தரவுப்படி பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் ஆண்டு முழுவதும் (365 நாட்கள்) கொள்முதல் செய்த பாலை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்களின், கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை, எவ்வித மறுப்பும் தயக்கமும் காட்டாமல், அரசு நிர்ணயித்த தரத்தின் அடிப்படையில், எவ்வித தங்குதடையுமின்றி பாலினை கொள்முதல் செய்ய அந்தந்தப் பகுதி கூட்டுறவு சங்கங்களின் பொது மேலாளர்கள், துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் / விவசாயப் பெருமக்களின் கவனத்திற்கு துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்வதுடன், அரசு நிர்ணயித்த தரத்தில் பாலினை ஆண்டு முழுவமும் அந்தந்தப் பகுதி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அதற்குரிய பயன்களை பெற்று மகிழ்ச்சியடையுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.