தமிழக மீனவர்கள் ஜாமீனுக்கு ரூ.1 கோடி: இலங்கை நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல விரும்பினால் ரூ.1 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 24ம் தேதி தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடலோர காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி 12 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களின் படகு, வலை, மீன்களையும் பறிமுதல் செய்தனர். இந்த மீனவர்கள் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை ஏப்ரல் 7ம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் 12 பேரையும் வரும் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் மீனவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர வேண்டுமென்றால், அவர்கள் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.