டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ரவி சந்திப்பு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதால், அவரை திரும்ப பெற வேண்டும் என்று மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி கொண்டு வந்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொள்ளாததால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பும் செய்தனர்.இந்நிலையில், தமிழக ஆளுநர் ரவி திடீர் பயணமாக நேற்று டெல்லி சென்றார். சாணக்கியபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் அவர், தனது பயண திட்டத்தின் முதல் நாளான நேற்று மாலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். 15 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் விவகாரங்கள், நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்திப்பதற்கு அவர் நேரம் கேட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.