டெல்லியில் பாதிப்பு 3-வது நாளாக உயர்வு: இந்தியாவில் புதிதாக 1,109 பேருக்கு கொரோனா

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் புதிதாக 176 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு 2 நாட்களுக்கு முன்பு பாதிப்பு 112 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 126 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மேலும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 128, மிசோரத்தில் 123 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 43 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட 36 மரணங்கள் அடங்கும்.

இதுதவிர மகாராஷ்டிராவில் 6, உத்தரபிரதேசத்தில் ஒருவரும் அடங்குவர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,21,573 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,213 பேர் நேற்று முழுமையாக மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போது 11,492 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 147 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 16,80,118 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 185 கோடியே 38 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 79.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,53,582 மாதிரிகள் அடங்கும்.

இதையும் படியுங்கள்… ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களில் அரசின் தலையீடு இல்லை: மந்திரி சுதாகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.