வாங்க ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபனை கொண்டாடுவோம்: பாரதிராஜா அழைப்பு

இயக்குநரும், நடிகருமான
பாரதிராஜா
சக கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

என் இனிய தமிழ்ச் சொந்தங்களுக்கு,

உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,

வணக்கம்.

படைப்புகளால் மக்களுக்கு இன்பச் சாமரம் வீசும் கலைஞர்கள் இங்கு இருப்பது தமிழ் சினிமாவின் வரம்.

அதிலும், தமிழ் சினிமாவை சிரசிலேந்தி பாரெங்கும் பரப்பும் திறன் மிகு நாயகர்கள் வாய்த்திருப்பது வரத்திலும் வரம்.

அப்படியான வரத்திலும் வரமான ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானும், ஆர். பார்த்திபனும் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்கி நம் முன் விருந்து படைக்கின்றனர். இரவின் நிழல் என்ற அப்படத்தை என்னைக் காணச் செய்த பார்த்திபனுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

மனதை கொள்ளை கொள்ளும் நிழலைக் கண்டேன். மனம் நிறைந்தேன். அப்படைப்பின் இசை நாயகனின் பயணத்தைக் கொண்டாடும் விதமாக மே 1ஆம் தேதி விழா தீவுத்திடலில் நடக்கிறது.

என் சார்பாக திரைத்துறையினர் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள். நீங்கள் கலந்துகொள்வதே இக்கலைஞர்களைக் கவுரவிப்பதற்கும் பெருமைப்படுத்துவதற்கும் சமம்.

வந்து கலந்து இக்கலைஞர்களின் பணியை பெருமிதம் கொள்ளச் செய்வோம். மே 1 திரைத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவாக அவ்விழா அமையச் செய்ய மூத்த கலைஞன் என்ற முறையிலும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேசன் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

உங்கள் பாசத்திற்குரிய

பாரதிராஜா.

தலைவர்

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படக் கதை சுட்டதா, விஜய் என்ன சொன்னார்?: நெல்சன் திலீப்குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.