18+ பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – மத்திய அரசு க்ரீன் சிக்னல்!

வரும் 10 ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, சுகாதாரப் பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்கள் என, அனைத்துத் தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ஒருசில தனியார் மருத்துவமனைகளில், ரஷ்ய நாட்டின், ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில்,
பூஸ்டர் டோஸ்
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
கொரோனா பூஸ்டர் டோஸ்
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

நாடு முழுவதும் வரும் 10 ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசி தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
மற்றும் இரண்டாவது டோஸ் எடுத்து 9 மாதங்கள் முடித்த அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.