"இந்தி திணிப்பு".. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அமித் ஷாவுக்கு சித்தராமையா எச்சரிக்கை

இந்தி
தேசிய மொழி அல்ல. அதை மக்களிடம் திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் கர்நாடகமுதல்வர்
சித்தராமையா
கூறியுள்ளார்.

இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
பேசியுள்ளார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு தலைவர்களும், அமித் ஷாவின் பேச்சு, இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முயற்சியை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், ஒரு கன்னடராக, அலுவல் மொழி மற்றும் தகவல் பரிமாற்ற மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சுயமரியாதைக்காரனாக இதை நான் எதிர்க்கிறேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் விட மாட்டோம்.

அமித்ஷாவின் வேர் காந்தி பிறந்த மண்ணில் உள்ளது. ஆனால் அவரோ சாவர்க்கர் போல செயல்படுகிறார். மொழிப் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டவர் மகாத்மா காந்தி. ஆனால் சாவர்க்கரோ, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியைப் பயன்படுத்தியவர்.

இந்தியா திணிக்க முயன்றால், அது தோல்வியில்தான் முடியும் என்பதை வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். கன்னடம் தான் எங்களது அடையாளம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். பாரதத்தின் மகள்
கர்நாடகா
என்று மகாகவி குவெம்பு சொன்னதை நாங்கள் நம்புகிறோம், அதையே பின்பற்றுகிறோம்.

இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், குஜராத்தி எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கர்நாடகத்தில் கன்னடதான் பிரதானம். அந்த இடத்தில் வேறு எந்த மொழியையும் பொருத்திப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே மாநிலங்களின் அலுவல் மொழியாக இந்தியை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தியை தேசிய மொழியாக்க முயன்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க அணி திரள வேண்டிய நேரம் இந்தி பேசாத மாநிலங்களுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்காளம், வட கிழக்கு மாநிலங்களில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில்லை. அவர்களிடம் இந்தியைத் திணிப்பது கலாச்சார தீவிரவாதமாகும். உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்துக்கள் நாட்டு மக்களை அவதிக்கும் வகையில் உள்ளது. எனவே தனது கருத்தை வாபஸ் பெறுவதோடு, நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் சித்தராமையா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.