இலங்கையில் டீசல் காலி இந்தியா மீண்டும் உதவுமா?| Dinamalar

கொழும்பு:இலங்கையில் டீசல் கையிருப்பு இம்மாத இறுதிக்குள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் மீண்டும் இலங்கை உதவி கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருளை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இதன்படி, கடந்த மார்ச்சில் இலங்கைக்கு எண்ணெய் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்து, 15, 18, 23 தேதிகளில் மேலும் முன்று எண்ணெய் கப்பல்கள் இலங்கைக்கு செல்ல உள்ளன.
இந்நிலையில் இலங்கையில் டீசல் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.இந்தியாவின் சப்ளையை வைத்து, இம்மாத இறுதிவரை மட்டுமே தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் பற்றாக்குறையால் சில அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் தினமும், 10 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் டீசல் கையிருப்பு காலியாகும் பட்சத்தில், இலங்கை கூடுதல் நெருக்கடிக்கு ஆளாகும்.எனவே, இந்தியாவிடம் மீண்டும் எரிபொருள் உதவியை இலங்கை கோரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ கழகம் எச்சரிக்கை

இலங்கையில் இறக்குமதி தடைபட்டுள்ளதால் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதுமான மருந்துகள் இல்லாததால் பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலர் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் நாடு மோசமான நிலையை சந்திக்க நேரும் என, இலங்கை தேசிய மருத்துவ கழகம் எச்சரித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.