முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய துறவியை கைது செய்ய வேண்டும் – உ.பி. போலீஸாருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ’இந்து பெண்களை கேலி செய்தால், முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வேன்’ என துறவியான மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மிரட்டியிருந்தார். அவரை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் உ.பி. போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

உ.பி.யின் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2-ல் சீதாபூரில் நடைபெற்ற ஒரு இந்துக்களின் ஆன்மீக ஊர்வலத்தில் கலந்து கொண்டார். வாகனத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு மஹந்த் பஜ்ரங் முனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் சீதாபூரின் கைராபாத் பகுதியின் மசூதியை கடந்து சென்றது. அப்போது துறவியான பஜ்ரங் முனி தாஸ் முஸ்லிம் பெண்களை மிரட்டும் வகையில் விடுத்த அறிவிப்பு சர்சையாகிவிட்டது.

அப்போது தம் வாகனத்தில் அமர்ந்தபடி பேசிய மஹந்த் பஜ்ரங் முனி கூறும்போது, ‘‘இதை நான் மிகவும் அன்பான வார்த்தைகளால் கூறிக்கொள்ள விரும்புகிறேன், கைராபாத்தில் ஒரு இந்து மதத்தின் பெண்ணாவது கேலி செய்யப்பட்டால், கைராபாத்தின் முஸ்லிம் மருமகள்களை அவர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து பாலியல் பலாத்காரம் செய்வேன்’’ எனக் குறிப்பிட்டார்.

வீடியோ வைரல்

இந்த மிரட்டலின் வீடியோ காட்சிகள், சமூகவலை தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலானது. இதை தொடர்ந்து துறவி பஜ்ரங் முனி மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சீதாபூரின் வடக்கு காவல்துறை ஆணையர் ராஜீவ் தீட்ஷித்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தகவலை தங்கள் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்ட சீதாபூர் போலீஸார், இதில் கிடைக்கும் ஆதாரங்களின் பேரில் மஹந்த் பஜ்ரங் முனி மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட் டிருந்தனர்.

இந்நிலையில், டெல்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, உபி போலீஸாருக்கு நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிஜிபி.க்கு கடிதம்

அதில், இதுபோன்ற நடவடிக்கைகளை கேள்விப்பட்டு போலீஸார் மவுனம் காக்கக் கூடாது எனவும், உடனடியாக மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டியது தம்முடைய கடமை எனவும் குறிப்பிட்டுள்ள ரேகா சர்மா, உ.பி.யின் டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.