மும்பையை தொடர்ந்து குஜராத்திலும் எக்ஸ்இ கரோனா?

அகமதாபாத்: கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் நிலையில் குஜராத்திலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனை அடுத்து கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ள்ளன. வெளிநாட்டு விமான சேவையும் மீண்டும் தொடங்கின.

இதனிடையே பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கரோனா திரிபு கண்டறியப்பட்டது தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும்.

கரோனா புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருந்தது.

இந்தநிலையில் இந்தியாவின் முதல் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது. மும்பை மாநகராட்சி தகவலின்படி புதிய வைரஸ் திரிபு தொற்று கொண்ட நோயாளிகளுக்கு இதுவரை கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய சான்றுகள்படி இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பகுப்பாய்வு முடிவுகள் வந்த பிறகே அதிகாரபூர்வமாக எதனையும் கூற முடியும் என தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் குஜராத்தில் ஒருவருக்கு கோவிட் எக்ஸ்இ பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த விவரங்கள் மரபணு நிபுணர்களால் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் குஜராத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நபர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து குஜராத் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘குஜராத்தில் இருந்து மாதிரிகள் தேசிய வைரலாஜி பகுப்பாய்வு அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும் மும்பையில் கண்டறியப்பட்டதை விடவும் எக்ஸ்இ வரையறைக்கு பொருந்துகிறது. குஜராத்தில் உள்ள ஒரு இன்சாகாக் ஆய்வகம், குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவை மாறுபாட்டை உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. எனினும் பகுப்பாய்வு முடிவுகள் வெளியான பிறகே அதிகாரபூர்வமாக கூற முடியும்’’ எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.