கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் விலை ரூ.225 ஆக குறைப்பு

புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கிடையே, இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோசின் விலை ரூ.1,200 ஆகவும், கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோசின் விலை ரூ.600 ஆகவும் இருந்தது.
இந்நிலையில், இரு தடுப்பூசி டோஸ்களின் விலையும், பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டு ரூ.225 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது.  இதனை சீரம் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா மற்றும் பாரத் பயோடெக் துணை நிறுவனர் சுசித்ரா எல்லா தங்களது டுவிட்டரில் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.