உலகில் மிக உயர ஆஞ்சனேயர் சிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு| Dinamalar

துமகூரு : குனிகல், பிதனகரே பசவேஸ்வரா மடத்தில், புதிதாக கட்டப்பட்ட உலகிலேயே மிகவும் பெரிதான 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக திறந்து வைக்கிறார்.துமகூரு குனிகல்லின், பிதனகரே பசவேஸ்வரா மடத்தில் 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக, இன்று திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சிகளை, முதல்வர் பசவராஜ் பொம்மை, துவக்கி வைக்கிறார். இன்று ஹெலிகாப்டரில் குனிகல் வரும் முதல்வர், இங்கிருந்து சாலை வழியாக மடத்துக்கு செல்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்பார்.இது தொடர்பாக, பசவேஸ்வரா மடத்தின், தனஞ்செய குருஜி கூறியதாவது:டில்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஆஞ்சனேயர் சிலையை திறந்து வைக்க வரும்படி, அழைப்பு விடுத்தோம். சிலை வடிவத்தை பிரதமர் பாராட்டினார். திறந்து வைக்கவும் சம்மதித்தார்.

ஒரு முறை மடத்துக்கு நேரில் வருவதாகவும் நம்பிக்கையளித்தார்.சிலை திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆதி சுஞ்சனகிரி மடத்தின் நிர்மலானந்தநாத சுவாமிகள், சித்தகங்கா மடத்தின் சித்தலிங்க சுவாமிகள் உட்பட பல்வேறு மடாதிபதிகள், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எம்.பி., சதானந்தகவுடா, அமைச்சர் அஸ்வத் நாராயணா பங்கேற்பர்.நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.மடம் சார்பில் அனைவருக்கும் சிற்றுண்டி, உணவு, குடிநீர், மோர், பானகம், கழிப்பறை என, மற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.