'சீன முதலீடுகள் வேண்டாம்; மே மாதம் இன்னும் நெருக்கடி வலுக்கும்' – இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை அரசு புதிதாக சீன முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடாது என்றும், இலங்கைக்கு இந்தியா எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிவிட்டது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “இலங்கையில் இந்த நெருக்கடிக்கு ஆளுங்கட்சிதான் முழுக் காரணம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இவ்வாறாக நடக்கவில்லை. மக்கள் தெருக்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் கோத்தபய ராஜபக்ச அரசின் திறமையின்மையால் நடந்துள்ளது. நான் 2019ல் பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது நாட்டில் வர்த்தக மூலதனம் அபரிமிதமாகவே இருந்தது. இறக்குமதிகளுக்கு செலுத்த அரசு கஜானாவில் பணம் இருந்தது. ஆனால் இன்று மக்கள் தெருக்களில் நிற்கிறார்கள்.

இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடி அரசியல் சிக்கலுக்கும் வழிவகுத்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளாகவே நாட்டின் பொருளாதார நிலைமை பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. ஆனால், இந்த அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை.இன்னமும் கூட நிவாரணத்திற்காக இந்த அரசு சர்வதேச நிதியத்தை அணுகவில்லை. இவ்வளவு காலம் கடந்துவிட்டதால் இனி ஒருவேளை அரசு ஐஎம்எஃபை அணுகினாலும் கூட அதன் வாயிலாக ஸ்திரமான பலன் கிடைக்க அதிக காலம் எடுக்கலாம்.அரசாங்கத்திடம் எந்த ஒரு பொருளின் கையிருப்பும் தேவையை பூர்த்தி செய்யும் அளவில்கூட இல்லை. இப்போது முன்னணி தனியார் ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க திட்டம்போடுகிறது அரசு.

சீன முதலீடு வேண்டாம்: இந்தியாவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இலங்கைக்கு உதவி விட்டது. இந்தியா அளித்துள்ள எரிபொருளும் மே 2 ஆம் வாரம் வரையிலுமே கையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இலங்கையின் நிலைமை என்னவென்று யோசிக்க முடியைல்லை. இலங்கை அப்போதுதான் இன்னும் மோசமான சவால்களை எதிர்கொள்ளப் போகிறது. எரிபொருள் கடன் அளவை பலமுறை நீட்டித்துவிட்ட இந்தியா மேற்கொண்டு நிதி சாராத உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி 2020, 2021 என இரண்டு ஆண்டுகளுமே அரசு உடனடியாக சர்வதேச நிதியத்தின் உதவியை நாடுமாறு அறிவுரை கூறியது. ஆனால் அரசு அதை சிறிதும் சட்டை செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு புதிதாக சீன முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இன்னும் ஒரு வாரத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நிதியமைச்சர் ஆகியோர் ஐஎம்எஃப் (சர்வதேச நிதியத்தை) உதவி கோரி நாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.