`கமிஷன பிரிங்க; கவுன்சிலருக்கு ரூ.5 லட்சம் கொடுங்க' – திமுக கவுன்சிலர் ஆடியோ? – விளக்கம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேனி – அல்லிநகரம் நகராட்சி உள்ள 33 வார்டுகளில் 19-ஐ தி.மு.க கைப்பற்றியது. அ.தி.மு.க -7, அ.ம.மு.க -2, காங்கிரஸ்-2, சுயேச்சை -2, பா.ஜ.க -1 ஆகிய இடங்களை முறையே பிடித்தன. இதையடுத்து நகர்மன்றத் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தி.மு.க ஒதுக்கிய நிலையில், தலைமையின் அறிவிப்பை மீறி தி.மு.க கவுன்சிலர் ரேணுப்ரியா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க-வினர் தங்கள் பதவிகளை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டும், தனது பதவியை ரேணுப்பிரியா ராஜினாமா செய்யவில்லை.

தேனி-அல்லிநகரம் நகராட்சி கூட்டம்

இந்நிலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சியின் முதல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க-விலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க நகர பொறுப்பாளரும், 20-வது வார்டு கவுன்சிலருமான பாலமுருகன் உட்பட 8 தி.மு.க கவுன்சிலர்கள், 2 அ.ம.மு.க கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதில் நகராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட 9 தி.மு.க கவுன்சிலர்கள் அ.தி.மு.க கவுன்சிலர்கள் 9 பேர், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 2 சுயேச்சைகள், ஒரு பா.ஜ.க கவுன்சிலர் என மொத்தம் 23 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. நகராட்சியில் நடந்த முதல் கூட்டத்திலேயே தி.மு.க கவுன்சிலர்கள் 10 பேர் கலந்து கொள்ளாதது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பாலமுருகன்-ரேணுப்ரியா

இந்நிலையில் முதல் கூட்டத்திற்கு அழைப்பதற்காக நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா, 29-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரிவிடம் பேசிய ஆடியோ வெளியாகி தேனி மாவட்ட தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சந்திரகலா ஈஸ்வரி, `ஏற்கெனவே பேசியபடி எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும், அதுவரை கூட்டத்தில் பங்கேற்பதில்லை என எல்லா கவுன்சிலர்களும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். தேர்தலுக்கு முன்பே வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறியதையும் கொடுக்கவில்லை. கமிஷன் பர்சன்டேஜ் பிரிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் கமிஷன் குறித்து முன்கூட்டியே பேசவில்லை. செல்வம் (32 ஆவது வார்டு திமுக கவுன்சிலர்) எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதாகக் கூறிவிட்டார்’ எனக் கூறுகிறார்.

சந்திரகலா ஈஸ்வர்

அதற்கு பதிலளிக்கும் நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா, `மொத்த பணமும் தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தரவேண்டிய பணத்தை தருகிறோம் எனச் சொல்லியிருந்தோம். பழைய டெண்டர்களுக்கு கமிஷன் கொடுக்க முடியாது. தேர்தலின் போது எல்லோருக்கும் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செய்தோம். ஆனால் எங்களின் பதவியே உறுதியில்லாமல் உள்ளது’ எனப் பேசியுள்ளார்.

செல்வம்

நீண்ட காலமாக நகராட்சியில் கவுன்சிலர்களின்றி பல்வேறு திட்டப் பணிகள் முடங்கியிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்தநிலையில் வார்டுகளில் உள்ள குறைகள் அனைத்தும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பிக்கொண்டிருந்த தேனி மக்கள் இந்த ஆடியோவைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக கமிஷன் பர்சன்டேஜ் பிரிப்பதில் குறியாக இருக்கும் கவுன்சிலரின் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவி கிடைக்காது என்பதால் துணைத் தலைவர் பதவியாவது கொடுக்கலாம் எனப் பேசப்பட்டுள்ளது. ஏற்கெனவே தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவி 32-வது வார்டு கவுன்சிலர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் செல்வம் துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது. அவ்வாறு விடவேண்டும் என்றால், தேனி நகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்கதமிழ்ச்செல்வன்

இதுகுறித்து ரேணுப்ரியாவின் கணவர் பாலமுருகனிடம் பேசினோம். “காங்கிரஸ் கட்சியினர் துணைத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் தி.மு.க-வில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட செல்வம் விட்டுக்கொடுக்க மனமில்லாமல், தி.மு.க கவுன்சிலர்களை தூண்டிவிட்டு கூட்டத்திற்கு வரவிடாமல் செய்கிறார்” என்றார்.

செல்வமோ, “அந்த ஆடியோ குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கறிஞராக உள்ள நான் கடந்த 3 நாள்களாக தொழில் தொடர்பான வேலைகளில் உள்ளேன். துணைத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கக் கூறி யாரும் என்னிடம் கேட்கவில்லை. நானும் யாரிடமும் துணைத் தலைவர் பதவி, நகரச் செயலாளர் பொறுப்பு தொடர்பாக பேசவில்லை” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தேனி மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வனிடம் பேசினோம். “சம்பந்தமில்லாமல் என்னை தொடர்புபடுத்தி பேசியிருக்கின்றனர். இவ்வாறு பேசுவதும் தவறு, ஆடியோ ரெக்கார்ட் செய்து போடுவதும் தவறு. கூட்டத்தில் தி.மு.க-வினர் கலந்துகொள்ளாதது குறித்தும் என்னிடம் யாரும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர் கொடுப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. என்னிடம் அவர்களின் பணம் இருப்பதாகக் கூறுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.