விலைவாசி உயர்வு குறித்து விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் காங். பெண் தலைவர் வாக்குவாதம்

புதுடெல்லி,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.கவுகாத்தியை அடைந்தவுடன், பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா வந்தார்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி இரானி, ‘‘வழியை மறிக்காதீர்கள். பின்னால் உள்ள பயணிகள் இறங்க வேண்டியுள்ளது’’ என்று அவரை பார்த்து கூறினார்.
பின்னர், விமானத்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தபோது, நேட்டோ டிசவுசாவிடம் பேசிய ஸ்மிரிதி இரானி, ‘‘கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 27 மாதங்களாக இலவச உணவு தானியம் கொடுத்தோம். நீங்கள் என்னை முற்றுகையிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று கூறினார்.
அதற்கு நேட்டா டிசவுசா, ‘‘யாரையும் முற்றுகையிடவில்லை. நீங்கள் ஒரு மந்திரி’’ என்று கூறினார். உடனே இரானி, ‘‘நான் பதில் சொல்கிறேன் மேடம்’’ என்று கூறிவிட்டு, இலவச தடுப்பூசி பற்றி பேசத் தொடங்கினார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த தனியார் விமான நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே, ஒரு தனியார் செய்தி சேனல் ஆசிரியரை சூழ்ந்துகொண்டு திட்டிய குணால் காம்ரா என்ற காமெடி நடிகருக்கு, அந்த விமான நிர்வாகம் 6 மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.