’’காவல்துறை என்னை அவமானப்படுத்துகிறது’’ – தீக்குளித்த இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்

காவல்துறை தன்னை அவமானப்படுத்தியதாக கூறி காவல் நிலையம் அருகில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத் (25). இவர் இன்று (11.04.2022) மாலை திடீரென மேல்பாடி காவல்நிலையத்துக்கு சற்று தொலைவில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அவரை 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீக்குளித்த சரத் தீக்குளித்ததற்காக காரணத்தை கூறுகையில், காவல்துறையினர் அவரது வீட்டுக்கு வந்து அவதுறாக பேசுவதாகவும், அவர் நெல் அறுக்கும் இயந்திரம் வைத்துள்ளதாகவும், அதை ஓட்டிச்செல்லும்போது நிறுத்தி விசாரிப்பதால, தனக்கு அசிங்கமாக உள்ளது எனவும் கூறினார்.
image
இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவை கூறுகையில், ’’மேல்பாடி காவல் நிலையம் அருகே தீக்குளித்த சரத் என்ற இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் தீக்குளித்த சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் கடத்தல் மற்றும் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளன. போக்சோ வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சரத்தின் வீட்டுக்குச் சென்று நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு வரும்படி கூறியுள்ளார். இதை திசை திருப்பவே அந்த இளைஞர் மதுபோதையில் வந்து தீக்குளித்துள்ளார்’’ என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.