போர்க்களம்: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த நோபிள் அகாடெமி. வெற்றியைத் தொடரும் 'தடம் SA'.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘போர்க்களம்’ கால்பந்து தொடர் நடந்துவருகிறது. கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்நிலையில், மூன்றாவது சுற்று இந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

போர்க்களம் வாரம் 1: முதல் வாரத்தில் 14 கோல்கள்!

சனிக்கிழமை மதியம் நடந்த முதல் போட்டியில், தடம் சாக்கர் அகாடெமி, வோல்ஃப்பேக் எஃப்.சி அணியை எதிர்கொண்டது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருந்த வோல்ஃப்பேக் அணிக்கு இப்போட்டி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. 39-வது நிமிடத்தில் கோலடித்து தடம் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் வி.விஜேஷ். முதல் பாதியில் இதற்கு மேல் கோல்கள் அடிக்க முடியாமல் போக, தடம் அணி 1-0 என முன்னிலையோடு முடித்தது. ஆனால், இரண்டாவது பாதி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பதில் கோல் திருப்பியது வோல்ஃப்பேக். இதுவரை இத்தொடரில் 3 கோல்கள் அடித்திருக்கும் லோகேஷ், 50-வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார்.

இந்த கோலை வாங்கிய பின், இரண்டாவது கோலுக்குத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தது தடம் அணி. அதன் பலனாக, 56-வது நிமிடத்தில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரகதீஷ் அடித்த அந்த சிறப்பான ஃப்ரீ கிக் பாக்சுக்குள் வர, அதை ஹெட்டர் மூலம் 6 யார்ட் பாக்சுக்கு அனுப்பினார் வி.விஜேஷ். மார்க் செய்யப்படாமல் நின்றிருந்த டி.விஜேஷ் அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார். கடந்த வாரம் நடந்த YMSC அணிக்கெதிரான போட்டியில், ஆட்டத்தின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ‘வீரன் ஆஃப் தி மேட்ச்’ விருதை டி.விஜேஷ் தான் வென்றிருந்தார். அதன்பிறகு இரண்டு அணிகளும் கோலடிக்கவில்லை. அதனால், 2-1 என போட்டியை வென்றது தடம். தோல்வியோடு தொடரைத் தொடங்கிய அந்த அணி, இப்போது தொடர்ந்து 2 போட்டிகளை வென்றிருக்கிறது.

சனிக்கிழமை நடந்த இரண்டாவது போட்டியில் YMSC அணி 6-0 என யாவே எஃப்.சி அணியை வீழ்த்தியது. முதல் பாதியில் கீர்த்தி மோஹன், ஹெவிட் சாமுவேல் ராஜ் ஆகியோர் YMSC அணிக்கு கோலடித்தனர். அதனால், அப்பாதி 2-0 என முடிவுக்கு வந்தது. 58-வது நிமிடத்தில் யாவே எஃப்.சி வீரர் அவினாஷ் ‘ஓன் கோல்’ அடித்ததால், மூன்று கோல்கல் முன்னிலை பெற்றது YMSC. 81-வது நிமிடத்தில் YMSC செய்த அற்புதமான கவுன்ட்டர் அட்டாக்கைப் பயன்படுத்தி நான்காவது கோலை அடித்தார் ஶ்ரீராம். அதோடு நிற்காத அவர், 85-வது நிமிடத்தில் ஐந்தாவது கோலையும் அடித்தார். 89-வது நிமிடத்தில் பாலாஜி ஆறாவது கோலை அடித்து போட்டியை முடித்து வைத்தார். YMSC அணிக்கு இது இரண்டாவது வெற்றி. இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த யாவே, தொடர்ந்து இரண்டாவது தோவியை சந்தித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் எஃப்.சி.ரெவலேஷன் 1-0 என ஃப்யூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடெமியை (FIFA) வீழ்த்தியது. இரண்டு அணிகளும் கோலடிக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில், மாற்று வீரராக வந்த தியானேஷ் 75-வது நிமிடத்தில் கோலடித்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார். இதன்மூலம், எஃப்.சி.ரெவலேஷன் அணி இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. முதல் போட்டியில் தோற்றபின் கடந்த போட்டியில் கம்பேக் கொடுத்திருந்த FIFA, மீண்டும் தோல்வியடைந்திருக்கிறது.

இந்த வாரத்தின் கடைசிப் போட்டியில் நோபிள் கால்பந்து அகாடெமியை எதிர்கொண்டது MAFFC. இரண்டாவது நிமிடத்திலேயே கோலடித்து அதிரடியாகப் போட்டியைத் தொடங்கினார் நோபிள் வீரர் அருண். வோல்ஃப்பேக் வீரர் லோகேஷுக்கு அடுத்து, மூன்று போட்டிகளிலும் கோலடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் அருண். ஒன்பதாவது நிமிடத்தில் ஒரு அமர்க்களமான கோல் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் நோபிள் வீரர் சுரேஷ். 34-வது நிமிடம் மூன்றாவது கோலையும் அடித்தது நோபிள். வலது விங்கில் இருந்து வந்த அற்புதமான கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் அந்த அணியின் சீனியர் வீரர் ராஜபாண்டி. முதல் பாதி 3-0 என முடிவுக்கு வந்தது.

போர்க்களம் வாரம் 2: தொடரும் வோல்ஃப் பேக், நோபிள் ஆதிக்கம்!

ஏற்கெனவே 3 கோல்கள் பின்தங்கியிருந்த MAFFC அணிக்கு 66-வது நிமிடத்தில் அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது. ராஜபாண்டியை ஃபவுல் செய்த அஜித், இப்போட்டியில் இரண்டாவது யெல்லோ கார்ட் பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். சுமார் அரை மணி நேரம் 10 வீரர்களுடன் விளையாடியது அந்த அணி. 81-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு ரீபௌண்ட் வாய்ப்பை எளிமையாக கோலாக்கினார் நோபிள் வீரர் சிவசுப்பிரமணி. 4-0. இவர் பெங்களூரு எஃப்.சி வீரர் சிவசக்தியின் அண்ணன்! 85-வது நிமிடத்தில் ஐந்தாவது கோலும் அடிக்கப்பட்டது. கோல் கணக்கைத் தொடங்கிவைத்த அருண்தான் இந்த கடைசி கோலையும் அடித்தார். அதனால், 5-0 என வெற்றி பெற்றது நோபிள் அகாடெமி. அந்த அணியின் யுவன் ஷங்கர் ஆட்டத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

Porkkalam

விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறது நோபிள் அகாடெமி. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் வோல்ஃப்பேக், YMSC, தடம் அணிகள் கோல் வித்தியாச அடிப்படையில் 2-4 இடங்களைப் பிடித்திருக்கின்றன. FIFA, யாவே, எஃப்.சி.ரெவலேஷன் அணிகள் 3 புள்ளிகளுடன் அடுத்த 3 இடங்களில் இருக்கின்றன. 3 போட்டிகளிலும் தோற்றிருக்கும் MAFFC, கடைசி இடத்தில் இருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.