விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு:  4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் கைதான 8 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் மற்றும் ஜூனத்அகமது ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி இன்று (ஏப்.10) உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.