அடுத்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்

லண்டன்:

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருகிற 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் போரிஸ் ஜான்சன் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான நல்லுறவு, தடையற்ற வர்த்தகம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்திய தொழில்துறை தலைவர்களையும் போரிஸ் ஜான்சன் சந்திக்கக்கூடும். மேலும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுத்தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

அதன்பின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர இருந்தார். ஆனாலும் அந்த பயணமும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.