நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “எது தேவையானாலும், எப்போது வேண்டுமானாலும், மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 16) அன்று அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார். அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் குடியிருப்புகளை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டனர். முதல்வர், அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.பின்னர், தமிழக முதல்வர் வீடியோ அழைப்பில் ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு மக்களிடம் உரையாடினார். அப்போது அம்மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு முதல்வர் வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையேற்று, முதல்வர் ஸ்டாலின் ஆவடியில் இன்று (ஏப்.15) நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, அம்மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

முதலில், திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை 4 நபர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, ஆவடி பருத்திப்பட்டுக் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் மாணவி தர்ஷிணி வீட்டிற்குச் சென்று உணவு உண்டார். மேலும், மக்கள் பயன்பட்டிற்காக உயர் மின்கோபுர விளக்குகளையும், குடிநீர்த் தொட்டிகளையும் திறந்து வைத்தார். அதன் பிறகு, நரிக்குறவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை 30 நபர்களுக்கும், குடும்ப அட்டை 18 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 6 நபர்களுக்கும், கிராம நத்தம் பட்டா 46 நபர்களுக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 22 நபர்களுக்கும் என மொத்தம் 122 பயனாளாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அம்மக்கள் “எங்கள் குடியிருப்புக்கு நீங்கள் நேரில் வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, நீங்கள் பொறுப்பேற்றவுடன் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், சாலைகள், குடிதண்ணீர் வசதி ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்துக் கொண்டனர். அதற்கு முதல்வர் “எது தேவையானாலும், எப்போது வேண்டுமானாலும், மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம் என்றும், கடந்த மார்ச் 31-ம் தேதி புதுடெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்தித்தபோது கூட, நரிக்குறவர் சமுதாயத்தை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி மனு வழங்கினேன்” என்றும் தெரிவித்தார்.

திடீர் ஆய்வு: ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சென்னை திரும்பும் வழியில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி. உதயகுமார், துணை மேயர் எஸ். சூர்யகுமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.