திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு நடந்த வசந்த உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் வசந்த உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக வசந்த உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் பின்புறமுள்ள வசந்த உற்சவ மண்டபத்தை சேஷாசலம் வனப்பகுதியை போல் தேவஸ்தான தோட்டத் துறையினர் அலங்கரித்தனர்.

நேற்று உற்சவர் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கோவில் மாட வீதிகளின் வழியாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதைதொடர்ந்து ஏழுமலையானுக்கு தர்பார் நடத்தப்பட்டது. மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் விசே‌ஷ அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து நடந்த பல சமர்ப்பணங்களுக்கு பின்னர் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். 2-வது நாளான இன்று காலை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையான் தங்கரத உற்சவத்தில் வலம் வந்தார்.

நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான், சீதா தேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.