கோர்ட்டுக்குள் புகுந்து வழக்கு சம்பந்தமான கோப்புகளை திருடி சென்ற மர்ம நபர்

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் கோர்ட்டு வளாகத்தில் 4-வது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் கொலை சம்பந்தமான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வாதிகள், பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகள் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்க இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4-வது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதிலிருந்த ஒரு சில பேப்பர்களை கால்வாயில் வீசிவிட்டு மீதமிருந்த பேப்பர்களை எடுத்து சென்றது தெரியவந்தது.

கோர்ட்டு ஊழியர்கள் இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கு சம்பந்தமான கோப்புகளை திருடிச் சென்றது யார்? எதற்காக திருடிச் சென்றனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டு வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கோர்ட்டுக்கு வெளியே சாலைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நள்ளிரவில் கோட்டுக்குள் நுழைந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை திருடி சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.