இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்…!

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுருவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீண்டும்  கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் என்று ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.