மும்பையில் எளிமையாக நடந்த ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்

'பாலிவுட்' நடிகர்கள் ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும், மும்பையில் உள்ள வீட்டில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

'பாலிவுட்' நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராயிருந்து மறைந்த ராஜ் கபூரின் பேரனும், மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், 39, இயக்குனர் மகேஷ் பட் மகள் ஆலியா பட், 29, இருவரும் 2018ல் இருந்து காதலித்து வந்தனர். இவர்கள் 2019ல் திருமணம் செய்து கொள்வர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ரன்பீர் – ஆலியா திருமணம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நேற்று எளிமையாக நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வந்த திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திருமணம் முடிவடைந்த தகவலை உறுதி செய்தனர். அதன் பின், செய்தி சேகரிக்க வீட்டு வாசலில் காத்திருந்த செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருமண நிகழ்ச்சியில் ரன்பீர் கபூரின் தாயார் நீத்து கபூர், சகோதரி ரிதிமா கபூர், உறவினரும் நடிகையுமான கரீனா கபூர், கரிஷ்மா கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலியா பட்டின் தந்தையும் இயக்குனருமான மகேஷ் பட், தாயார் சோனி ரஸ்தான், சகோதரி பூஜா பட் உட்பட, 'பாலிவுட்' நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.