ஒரு வாரத்தில் 3 பேர் பலி : இன்னும் எவ்வளவு பேரை காவு கொடுக்கப் போகிறோம்? மருத்துவர் இராமதாஸ் வேதனை.!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஒரு வாரத்தில் 3 பேர் பலி : இன்னும் எவ்வளவு பேரை காவு கொடுக்கப் போகிறோம்? – உடனடியாக தடை சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழக அரசை பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த உணவக ஊழியர் காந்திராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில்  லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்  கவலை அளிக்கின்றன!

கடந்த ஒரு வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பறிபோன மூன்றாவது உயிர் இதுவாகும். இதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி ஆட ஒரு மாணவர் மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தார்; குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் அடித்துக் கொல்லப்பட்டார்!

ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்வது தினசரி நிகழ்வாகி விடும். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை காரணம் காட்டி ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?

மதுவும், லாட்டரி சீட்டும்  ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனவோ, அதை விட மோசமான சீரழிவுகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.